இந்தியா

பன்றிக்காய்ச்சல் சிகிச்சை : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித் ஷா

webteam

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று வீடு திரும்பினார்.

அமித் ஷா வீடு திரும்பியது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள தகவலில், அமித் ஷா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார். அவருக்கு உடல்நலம் முழுவதும் சீரடைந்துள்ளது. அவருக்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகளை பாஜக தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 17ஆம் தேதி, தமக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷா தெரிவித்திருந்தார். கடவுளின் கருணையாலும், மக்களின் வாழ்த்துகளாலும் தாம் விரைவில் நலம்பெறுவேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட்டிற்கு முந்தைய நாள், 9 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் பழைய வார்டில் அமித் ஷா சேர்க்கப்பட்டதாக பாஜகவினர் தெரிவித்திருந்தனர்.

அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சையளித்தது. சிகிச்சைப் பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டெல்லி எம்பி மகேஷ் கிரி மற்றும் பாரதிஅய் ஜனதா எம்பி மீனாட்சி லேக்கி ஆகியோர் அமித் ஷாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் அமித் ஷா நலம் பெற வேண்டும் தெரிவித்திருந்தனர்.