இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்

குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்

webteam

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்து நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜ.க.வும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்று வருகிற ஜூலை மாதம் 25 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை பரிசீலிக்கும் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

பா.ஜ.க.வில் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி மர்மு போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த மூவரில் ஒருவரை பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரசும், பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இடது சாரி கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதேபோல் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்த வாரத்தில் சோனியா காந்தி சந்தித்துப் பேசுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் என இருமுனைப் போட்டி நிலவும். குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.