இந்தியா

'2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 50 இடங்களை இழக்கும்' - சசி தரூர் ஆருடம்

JustinDurai

கடந்த 2019ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைப் போல ஒன்றை பாஜகவால் நிச்சயம் அடுத்த தேர்தலில் அடைய முடியாது என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்.

கேரள இலக்கிய விழாவில் நேற்று பேசிய திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர், "2019இல் பாஜக பெரிய வெற்றியை அறுவடை செய்ய காரணம் என்னவென்றால், அவர்கள் ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் வென்றனர். பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் மாநிலங்களில் ஒரு இடம் தவிர அனைத்து இடங்களிலும் வென்றனர். அதேபோல மேற்கு வங்கத்திலும் 18 இடங்களைக் கைப்பற்றினர். அவர்களால் நிச்சயம் இதுபோன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற முடியாது.

அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் அவர்கள் பெரும்பான்மையை இழக்கவும் வாய்ப்புகள் அதிகம். 2019இல் அவர்கள் பெற்ற வெற்றியை மீண்டும் பெறவே முடியாது. இதனால் 2024இல் பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது. அடுத்து வரும் தேர்தலில் அவர்கள் குறைந்தது 50 சீட்களை இழப்பார்கள். இந்த இடங்களில் எதிர்க்கட்சிகள் வெல்ல வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது" என்றார்.