இந்தியா

POSOCO-விடம் மின்சாரம் வாங்கவும் விற்கவும் தமிழகத்துக்கு தடை! ஏன் தெரியுமா?

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தத் தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்பகிர்மான நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தத் தவறியதால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.நரசிம்மன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்றக் கட்டணமாக 5,100 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

BILL தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் நிலையில், அதைக் கடந்தும் செலுத்தாத காரணத்தால் மின்சார கொள்முதல் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் இந்த தடையை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையே தமிழகத்தின் கட்டண பாக்கி 200 கோடி ரூபாய்க்கும் குறைவு என்றும் அது ஓரிரு நாட்களில் செலுத்தப்படும் என்றும் டேன்ஜெட்கோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.