பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள்
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் கோப்புப்படம்
இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: நீதிமன்ற உத்தரவின்படி குற்றவாளிகள் மீண்டும் சரண்!

Angeshwar G

குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, வன்முறையாளர்கள் சிலரால் பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்நேரத்தில் அவர் 5 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அன்றைய தினம் பில்கிஸ் பானுவின் 3 வயது மகள், அவரது குடும்பத்தினர் உட்பட 14 பேர் பில்கிஸ் பானு கண்முன்னேயே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம்

பின்னர் இதுதொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008-ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின் அதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 10-15 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நன்னடத்தையின் அடிப்படையில் குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பினர் இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விரிவான விசாரணை செய்து வந்த சூழலில், கடந்த ஆண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்தச் சூழலில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றம்

விடுதலை தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. குஜராத் அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அவர்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள்” எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், “முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என உத்தரவிட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளில் 5 பேர் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், அவர்களிடம் விசாரணை நடத்தி தீர்ப்பளித்தது. அதன்படி, நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி குற்றவாளிகள் குறிப்பிட்டிருந்த காரணங்கள் தகுதியற்றது என குறிப்பிட்டிருந்த நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு உத்தரவிட்டனர்.

காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்த குற்றவாளிகள், விவசாயப்பொருட்களை அறுவடை செய்யவேண்டும் எனவும், மகனின் திருமண ஏற்பாடுகள் உள்ளது என்றும் உடல்நிலையைக் காரணம் காட்டியும் பல்வேறு காரணங்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளான, பகாபாய் வோஹானியா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, கோவிந்த் நை, ஜஸ்வந்த் நை, மிதேஷ் பட், பிரதீப் மோர்தியா, ராதேஷ்யாம் ஷா, ராஜூபாய் சோனி, ரமேஷ் சந்தனா மற்றும் ஷைலேஷ் பட் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய உள்ளூர் குற்றப்பிரிவு காவல் அதிகாரி, “11 குற்றவாளிகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர். ஜனவரி 21ஆம் தேதி அவர்கள் சிறையில் சரணடைய வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவுக்கு முன்பாக அவர்கள் சிறையில் சரணடைந்தனர்” என தெரிவித்துள்ளார்.