பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மாயமான விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பீகாரில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வுகள் நடைபெற்றன. 1,400 தேர்வு மையங்களில் 18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுகள் முடிந்ததை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, பீகார் மாநிலத்தில் பொதுத் தேர்வில் டாப் மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்கள் அடைப்படை கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறி வரும் சம்பங்கள் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னால் மிகப்பெரிய ஊழல் இருப்பதாக பின்னர் கண்டறியப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பணம் கொடுத்து அவர்கள் தேர்வில் மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விடைத்தாள்களை சோதனை செய்வதற்காக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்திருந்த விடைத்தாளை காண கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றுள்ளனர். ஆனால், விடைத்தாள் வைத்திருந்த அறையின் கதவை திறந்து பார்த்த போது, சுமார் 42 ஆயிரத்து 500 விடைத்தாள்கள் மாயமானது தெரியவந்தது.
மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புகார் கொடுத்த உடனே பள்ளியின் இரவு நேர உதவியாளர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டார். இந்தப் பிரச்னைகளால், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து ஜூன் 26ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இரவு பள்ளியின் உதவியாளர் உதவியுடன் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் கொண்ட 200 மூட்டைகள் வேனில் கொண்டு செல்லப்பட்டு பழைய பேப்பர் மார்ட்டில் போடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கோபால்கஞ்ச் போலீசார், பள்ளி முதல்வர், பியூன் உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விடைத்தாள்களை கொண்டு சென்ற வேனின் டிரைவரும் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விடைத்தாள்கள் இருக்கும் இடம் தெரியவந்தது. பள்ளி உதவியாளரிடம் இருந்து விடைத்தாள்கள் ரூ.8 ஆயிரத்து 500-க்கு எடைக்கு போட்டப்பட்டதும் தெரியவந்தது. கணாமல் போன விடைத்தாள்களும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
மாயமான விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் நாளை நிச்சயம் தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. போலீசார் அளித்த தகவலின்படி, பள்ளியின் உதவியாளர் யாரேனும் ஒருவரின் கட்டளைப்படி விடைத்தாள்களை எடைக்கு போட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக செய்திதாள்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பீகார் அரசிடம் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. இருப்பினும், இது நிதிஷ்குமார் அரசிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ செய்த சதி என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கிருஷ்ண நந்தன் பிரசாத் வெர்மா கூறியுள்ளார்.