இந்தியா

பீகார்: துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறி அமைச்சரின் மகனை தாக்கிய கிராம மக்கள்

Veeramani

மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பாஜக தலைவரும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமாரை, துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறி கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பீகார் மாநிலம் மொஃபுசில் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹரடியா கோரி தோலா கிராமத்தில், அமைச்சரின் மகனை கிராம மக்கள் சிலர் தாக்குவதையும், அவர் வைத்திருந்த துப்பாக்கியை அவர்கள் பறித்துச் சென்ற காட்சிகளும் நேற்று வெளியாகின.

ஒரு பழத்தோட்டத்தில் ஆக்கிரமிப்பு பற்றி அறிந்ததும் அந்த இடத்திற்குச் சென்றதாகவும், அங்கு கிராம மக்களால் தாக்கப்பட்டதாகவும், வாகனங்களை சேதப்படுத்தி தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை மக்கள் கொள்ளையடித்ததாகவும் பப்லு குமார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், தோட்டத்தில் சில குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்த்து அமைச்சரின் குடும்பத்தினர் மோதலில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர், இதற்காக பப்லு குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் நிலைமை கைமீறிப் போனதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த மற்ற நபர்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரின் மகன், துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது