பயங்கரவாத தாக்குதலில் தன் மகன் இறந்த நிலையில், இன்னொரு மகனை அனுப்பி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பேன் என சி.ஆர்.பி.எப் வீரரின் தந்தை கூறியிருப்பது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுள் ஒருவர், பீகார் மாநிலத்தின் பாகல்பூரைச் சேர்ந்த ரத்தன் தாகூர். இந்நிலையில், தனது மகன் இறப்பு தொடர்பாக பேசியுள்ள தாகூரின் தந்தை, “என் மகன் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்துவிட்டார். அவனை நான் எனது இந்திய தாயின் சேவைக்காக தியாகம் செய்துவிட்டேன். எனது இன்னொரு மகனையும் நாட்டிற்காக சண்டையிட அனுப்பப்போகிறேன். அவனையும் எனது இந்திய தாயின் சேவைக்கு தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் பாகிஸ்தானிற்கு தக்கடி பதிலடி கொடுப்போம்” என உணர்ச்சி மிகுந்த கண்ணீருடன், கோபமாக தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு அனைவரையும் பூரிப்படைய செய்துள்ளது.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்திய உட்பட உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன் அனைவருமே உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.