பீகார் மாநிலத்தில் சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் பணத்தை கொரோனா பயத்தால் யாரும் எடுக்காததால், தவறவிட்டவருக்கு அந்தப் பணம் முழுமையாக சென்று சேர்ந்துள்ளது.
இந்தியாவில் 44,000-க்கு அதிகமானோருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் 12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 568ஆகவுள்ளது. 32ஆயிரத்து 138 பேர் சிகிச்சையிலுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமநாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பயம் காரணமாக பீகார் மாநிலத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தின் சாஹர்சா மாவட்டம் கோபா கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திர ஷா. இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவர் நேற்று அதிகாலை கையில் ரூ25000 பணத்தை எடுத்துக்கொண்டு தேவையான பொருள்களை வாங்கி வருவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் பஜாருக்கு செல்வதற்கு முன்பாக தான் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை காணவில்லை என்பது தெரிய வந்தது. இதனை எங்கே தவறவிட்டோம் என்றும் கஜேந்திராவுக்கு தெரியவில்லை.
ஆனால் சாலையில் கிடந்த பணத்தை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் சிலர் பகிர்ந்துள்ளனர். மேலும் சாலையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் கொரோனா இருப்பதால், அதைச் சில வங்கி அதிகாரிகள் வீசிவிட்டு சென்றுவிட்டதாக செய்தியை பரப்பியுள்ளனர். இது தீயாய் பரவி, கடைசியில் கஜேந்திராவின் வாட்ஸ்அப்புக்கும் வந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்தத் தகவல் அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கும் தெரிய வந்தது. உடனடியாக விரைந்த போலீஸ் பணத்தை மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றது.
இதனையறிந்த கஜேந்திரா உதாகிஷ்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்று இது தன்னுடைய பணம்தான் என கேட்டுள்ளார். இதனையடுத்து முறையான விசாரணை நடத்திய போலீஸார் கஜேந்திராவின் பணம் இதுதான் என ஊர்ஜிதப்படுத்தி அவரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கஜேந்திரா கூறுகையில் "இந்தப் பணம் என்னுடைய 32 மாத உழைப்பு. என் பாக்கெட்டில் இருந்து புகையிலை எடுக்கும்போது பணம் கீழே விழுந்திருக்கும். கொரோனா பயத்தால் யாருமே என் பணத்தை தொடவில்லை. நானும் இப்போதுள்ள சூழ்நிலையில் சாலையில் பணம் இருந்தால் எடுத்திருக்மாட்டேன்" என்றார் அவர்.