இந்தியா

49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய முடிவு

49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய முடிவு

rajakannan

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை நிராகரிக்க பீகார் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நாட்டில் நடைபெற்று வந்த கும்பல் கொலைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதினர். இந்த கடிதத்திற்கு எதிராக வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, அபர்னா சென், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி உள்ளிட்டோர் மீது பீகாரின் சதார் காவல் நிலையத்தில் முஸாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கடந்த வாரம் புகார் அளித்தார். பீகார் நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் 49 பேர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய பீகார் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். “49 பேர் மேல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. புகாரை உறுதி செய்யும் வகையிலான ஆவணங்களை புகாரளித்தவர் சமர்பிக்கவில்லை” என்று கூறி போலீசார் புகாரை நிராகரித்துள்ளனர்.  தவறான தகவல்களின் அடிப்படையில் புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.