இந்தியா

2வது மனைவியுடன் சண்டை! குடும்பத்தையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொலைசெய்த முதல் மனைவி!

ச. முத்துகிருஷ்ணன்

பீகாரில் தனது கணவனின் 2வது மனைவியுடன் சண்டை போட்ட ஆத்திரத்தில் கணவன், 2வது மனைவி, மாமியார் என மொத்த குடும்பத்தையே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி விட்டு முதல் மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் - 40 வயது ஆண், அவரது இரண்டு மனைவிகள் மற்றும் அவரது தாயார் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் ப்ரௌல் நகரின் ஷேக்பூர் தோலா பகுதியில் இன்று காலை நடந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் நால்வர் இறப்புக்கு பின்னணியில் உள்ள உண்மைகள் தெரியவந்தன.

40 வயதான முகமது குர்ஷித் ஆலம் என்பவர் குல்ஷன் கதுன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வெகு நாட்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் குர்ஷித் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோஷன் காதுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன்பு ரோஷன் காதுன் கருவுற்று இருக்கிறார். இதையடுத்து முதல் மனைவி குல்ஷன் 2வது மனைவி ரோஷனுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர்களது மாமியார் ஜூபைதா காதுன் 2வது மனைவி ரோஷனுக்கு ஆதரவாக பேசியதால், குல்ஷன் நேற்று இரவு இருவருடனும் கடுமையாக சண்டையிட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். கணவர் குர்ஷித்தும் தனக்கு சாதகமாக எதுவும் பேசாத ஆத்திரத்தில், அதிகாலை முதல் மனைவி குல்ஷன் அதிகாலையில் தன்மீதும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே நால்வரும் உயிரிழந்தனர். குடும்பச் சண்டையில் ஒட்டுமொத்த குடும்பத்தையே தீக்கிரையாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணைகளுக்காக தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.