இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை? பாஜக - எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

JustinDurai

மாநில அரசுகள் அளித்த தகவல்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் மரணங்கள் எதுவும் நடக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ள நிலையில் அது குறித்து பாரதிய ஜனதாவும் எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

மாநில அரசுகள் அளித்த அறிக்கைப்படி கொரோனா 2ஆவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் எந்த ஒரு மரணமும் நிகழவில்லை என அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த தகவல் குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான் தங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை என நீதிமன்றத்திலும் மத்திய அரசிடமும் அறிக்கை அளித்திருந்ததாக தெரிவித்தார்.

இந்த சூழலில் ராகுல் காந்தியும் அர்விந்த் கெஜ்ரிவாலும் இரு வேறு விதமாக பேசி அரசியல் செய்து வருவதாக சம்பித் பத்ரா குற்றஞ்சாட்டினார். முன்னதாக, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணங்கள் எதுவும் நிகழவில்லை எனக் கூறி தங்கள் தவறுகளை மத்திய அரசு மறைக்கப் பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறப்புகள் எதுவும் இல்லை எனக் கூறும் மத்திய அரசு, நாளை கொரோனாவால் யாரும் இறக்கவில்லை என்றும் கூட கூறும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். ஆக்சிஜனுக்கு உள்நாட்டில் அதிகளவில் தேவை இருந்த நிலையில் மத்திய அரசு அதை ஏற்றுமதி செய்ததுதான் அதிகளவில் இறப்புகள் ஏற்பட காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.