சுசனா சேத்
சுசனா சேத் புதிய தலைமுறை
இந்தியா

’எந்த மனநோய் பாதிப்பும் இல்லை’ - மகனைக் கொலை செய்த பெண் சி.இ.ஓ. வழக்கில் போலீஸ் சமர்பித்த அறிக்கை!

Prakash J

பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுசனா சேத். இவர் கடந்த ஜனவரி 6ஆம் தேதி, வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து பெங்களூரு திரும்பிய சமயத்தில், தனது மகனைக் கொலைசெய்து பெரிய பேக் ஒன்றில் கொண்டுசென்றபோது சிக்கிக்கொண்டார். கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுசனா சேத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கும் கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

மகனை அவர் கொலை செய்தது தொடர்பாக அந்தச் சமயத்தில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. மேலும், மகனின் மருத்துவ அறிக்கைகளும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சூழலில், ’அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு மகனைக் கொன்றிருக்கலாம்’ என மனநல ஆலோசர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இதுதொடர்பாகவும் அறிக்கை அளிக்க நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அதுதொடர்பான அறிக்கையை, போலீசார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், ’சுசனா சேத்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் மனநோயால் எதுவும் பாதிக்கப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையே போலீசாரும் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள், ‘சுசனா சேத் மருத்துவப் பரிசோதனையின்போது மனநோய்க்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவே பதிலளித்தார்’ என விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், சுசனா சேத்துக்கு பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கையையும் கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர்.