இந்தியா

பெங்களூருவில் பிரதமர் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட சாலைகள்.. ஒரே வாரத்தில் பரிதாப நிலை!

ச. முத்துகிருஷ்ணன்

பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி வருகைக்காக ரூ.23 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை இரவு நேரத்தில் பெய்த கனமழையை தாங்க முடியாமல் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக பெங்களூருவில் ரூ. 23.5 கோடி செலவில் 14 கிமீ சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டன. கெங்கேரி முதல் கொம்மாகட்டா சாலை (7 கிமீ), மைசூர் சாலை (0.15 கிமீ), ஹெப்பால் மேம்பாலம் (2.4 கிமீ), துமகுரு சாலை (0.90 கிமீ) மற்றும் பெங்களூரு பல்கலைக்கழக வளாக சாலை (3.6 கிமீ) ஆகிய சாலைகளை அதிகாரிகள் மேம்படுத்தினர். மைதானங்கள், நிலையான தெரு விளக்குகள், வர்ணம் பூசப்பட்ட சாலைகள் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பிரதமர் வருகைக்கு சில நாட்கள் முன்பு அமைக்கப்பட்ட இந்தச் சாலைகளில் ஜூன் 20ஆம் தேதி பயணம் செய்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் இரவு நேரம் பெய்த கனமழையால் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாரியப்பன்பாளைய ஞானபாரதி பிரதான சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்படவே நகரவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையின் பல இடங்களில் பள்ளங்கள், பழுதுகள் ஏற்படவே பெருநகர பெங்களூரு மாநகராட்சி (BBMP) கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஜூன் 23 அன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தரக்குறைவான பணிகள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத், சில இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அது கனமழையால் மட்டுமே நடந்தது என்றும் சாலையின் முழு நீளமும் சேதமடைந்ததாகக் கூறுவது நியாயமில்லை என்றும் கூறினார்.

மேலும் சாலைப் பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றதாக சிறப்பு ஆணையர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார். “சில இடங்களில் ஏற்பட்ட சேதம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. மழை பெய்து, முறையான க்யூரிங் இல்லாததால், ஒட்டுவேலை உரிந்து இருக்கலாம். மீண்டும் சரி செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கூறுவோம்,'' என்றார் மனோகர்.