இந்தியா

பெங்களூரில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 2000 பேருக்கு பாதிப்பு!

JustinDurai

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை உருவெடுத்துள்ள கர்நாடாகாவில், குறிப்பாக பெங்களூரில்  வேகமாகப் பரவி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் நகரவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதத் தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஆக இருந்தது. ஆனால், மார்ச் 28-ஆம் தேதி அது 3,000  ஆக உயர்ந்துள்ளது. இது சுகாதாரத் துறையை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதார மற்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், "கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. 30 நாட்களில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை’’ என்றார்.