இந்தியா

பெங்களூரில் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் ஹெலிகாப்டர் சேவை

JustinDurai

பெங்களூரில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஹெலிகாப்டர் பயண சேவை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ‘பிளேட் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ‘பிளேட் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதி வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணிக்க 2 மணி நேரம் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால், ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கும் போது வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகுமாம்.

இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு ஒரே முறை மட்டுமே இரு மார்க்கத்திலும் சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி மற்றும் மாலை 4.15 என பயணத்திற்கான நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 10 முதல் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது. இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.3,250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு ! - உச்சநீதிமன்றம்