ஆனந்த போஸ், மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

மேற்கு வங்கம் | பதவியை ராஜினாமா செய்த ஆனந்த போஸ்.. ஆளுநராகும் R.N.ரவி.. முதல்வர் விமர்சனம்!

மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதை, அம்மாநில முதல்வர் விமர்சித்துள்ளார்.

Prakash J

மேற்கு வங்க மாநிலத்தில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவைத் தொடர்ந்து, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், "நான் மூன்றரை ஆண்டுகளாக வங்காள ஆளுநராக இருக்கிறேன்; அது எனக்குப் போதுமானது" எனத் தெரிவித்தார். இருப்பினும், தனது ராஜினாமாவுக்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. அதே நேரத்தில், இந்த ராஜினாமா வங்காள அரசியல் வட்டாரத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியும் கவலையும் அடைவதாகத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, சில அரசியல் நலன்களுக்காக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து சில அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்குத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நிறுவப்பட்ட மரபுப்படி, அவர் ஒருபோதும் என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, மேலும் நமது கூட்டாட்சி கட்டமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன. கூட்டாட்சி கொள்கைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும், மேலும் ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி

மற்றொரு சம்பவத்தில், லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் கவிந்தர் குப்தாவும் இன்று தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். ஜூலை 2025இல் லடாக்கின் மூன்றாவது லெப்டினன்ட் கவர்னராக குப்தா நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் பணியாற்றினார். இன்று, அடுத்தடுத்து ராஜினாமாக்கள் அரங்கேறியதால், பல மாநிலங்களில் ஆளுநர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.