இந்தியா

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் உடல் மார்ச் 20-ல் இந்தியா வந்தடையும் - பசவராஜ் பொம்மை

webteam

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் ஞாயிற்றுக்கிழமை அன்று கர்நாடகா வந்தடையும் என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 23 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மார்ச் 1 ஆம் தேதி ரஷ்ய படையினர் உக்ரைன் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எதிர்பாராத விதமாக கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். மாணவர் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

அப்போது, மாணவரின் உடலை விரைவில் மீட்டு தாயகம் கொண்டுவரக்கோரி மாணவரின் பெற்றோர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் மருத்துவ மாணவர் நவீனின் உடல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சேரும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.