செய்தியாளர்: ர.ராஜ்குமார்
லஞ்சம்… ஊழல்… அதிகார துஷ்பிரயேகம் போன்றவை தொடர்பாக அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு எதிராக ஒரே ஆண்டில் ஆயிரக்கணக்கான புகார்கள் பெறப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பாக பெறப்பட்ட ஊழல் புகார்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் (CVOs) மூலம் மொத்தம் 70,584 ஊழல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில், 64,905 புகார்கள் 2025 டிசம்பர் 31-க்குள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5,679 புகார்கள் ஆண்டின் இறுதியில் பரிசீலனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2,002 புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்துள்ளன.
மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் பட்டியலில், 9,933 புகார்களுடன் வங்கிகள் முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, 9,381 புகார்களுடன் ரயில்வே துறை இரண்டாவது இடத்திலும், 6,531 புகார்களுடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையும் உள்ளன. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக 4,834 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், நிலக்கரித் துறை தொடர்பாக 4,118 புகார்களும், நிதித்துறை தொடர்பாக 3,107 புகார்களும், டெல்லி அரசுடன் தொடர்புடையதாக 2,804 புகார்களும், பெட்ரோலிய அமைச்சகம் தொடர்பாக 2,722 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
அதேபோல், டெல்லி காவல்துறை தொடர்பாக 2,633 புகார்களும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பாக 2,139 புகார்களும், மனிதவள மேம்பாட்டுத் துறை தொடர்பாக 2,030 புகார்களும், தொழிலாளர் அமைச்சகம் தொடர்பாக 1,894 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக ஒரே ஆண்டில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.