இந்தியா

”என்ன பாத்தா குரைக்குற..” நாயை ஓட ஓட விரட்டி சுட்டுக்கொன்ற பெங்களூரு வாசி.. பகீர் சம்பவம்!

JananiGovindhan

தன்னை பார்த்து குரைத்த நாயை ஓட ஓட விரட்டி தலையிலேயே சுட்டுக் கொன்றிருக்கிறார் பெங்களூரு வாசி ஒருவர்.

அண்மைக் காலமாக தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் போன்றவற்றால் பல்வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருவது குறித்து அறிந்திருப்போம். ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர் தன்னை பார்த்து நாய் ஒன்று குரைத்ததற்காக அதனை ஓட ஓட விரட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணப்பா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து பேசியுள்ள காவல்துறையினர், “தன்னை நோக்கி ராக்கி என்ற நாய் தொடர்ந்து குரைத்து வந்ததால் கோபமடைந்த கிருஷ்ணப்பா அதனை ஏர் கன்னால் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

நாயை கொல்வதற்கு முன்பு சிறிது தூரம் கிருஷ்ணப்பா அதனை விரட்டிச் சென்றிருக்கிறார். சுற்றி பொதுமக்கள் இருந்தும் கிருஷ்ணப்பா கையில் துப்பாக்கி இருந்ததால் தடுக்காமல் விட்டிருக்கிறார்கள். இதையடுத்து பொதுவெளியிலேயே நாயை சுட்டுத் தள்ளியிருக்கிறார் கிருஷ்ணப்பா.

அந்த ராக்கி நாய் ஹரிஷ் என்பவர் வளர்த்து வந்த நிலையில், தொட்டபல்லாபுர காவல் நிலையத்தில் அவர் புகாரளித்ததன் பேரில் கிருஷ்ணப்பா மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.