கேரளா மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் தீபக் என்பவர், தன்னுடைய வேலை சம்பந்தமாக கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி கண்ணூர் சென்றார். அப்போது, பேருந்தில் பயணம் செய்த தீபக், அருகிலிருந்து இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தன்மீதான மோசமான பழியை பொறுத்துக்கொள்ள முடியாத தீபக், அவமானத்தால் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண், தன்னுடைய மொபைலில் செல்ஃபி வீடியோ ஒன்றை தீபக்கிற்கு தெரியாமல் எடுத்து இணையத்தில் பகிர்ந்தது தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வீடியோவை பகிர்ந்த பெண்மீது தான் தவறு என்றும், அவர் விளம்பரத்திற்காக இந்த குற்றத்தை செய்துள்ளார் என தீபக்கின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அப்பெண் குறித்தும், வெளியிடப்பட்ட வீடியோவிற்கான பின்னணி குறித்தும் விரிவான விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்த தீபக்கின் பெற்றோர், மனித உரிமைகள் ஆணையத்தை நாடப்போவதாக தெரிவித்திருந்தனர்.
தீபக்கின் மரணத்திற்கு காரணமான வீடியோ வெளியிட்ட இளம்பெண் ஷிம்ஜிதா மீது புகார்கள் அதிகமானதை தொடர்ந்து இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை புகாரை பதிவுசெய்தனர். இதற்கிடையே, ஒரு வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தான், ஷிம்ஜிதா கேரள காவல் துறையினரால் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டுதல் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஷிம்ஜிதா தன்னுடைய புகாரில் உறுதியாக இருப்பதாகவும், பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று, கோழிக்கோடு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும், சாட்சிகளை பாதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.