இந்தியா

ஓடும் காரிலிருந்து விழுந்த கைக்குழந்தை - உயிர்பிழைத்த அதிசயம்

ஓடும் காரிலிருந்து விழுந்த கைக்குழந்தை - உயிர்பிழைத்த அதிசயம்

webteam

ஓடும் காரிலிருந்து கைக்குழந்தை தவறி சாலையில் விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. 

கேரள மாநிலம் மூணார் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தமிழ்நாட்டில் கோவில்களில் வழிபாடுகளை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். மூணார் அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரில் இருந்த ஒரு வயது கைக்குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டது. பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், அந்தக் குழந்தை தவழ்ந்தபடி சாலையின் மறு முனைக்குச் சென்றது. நல்வாய்ப்பாக அந்தச் சமயத்தில் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் அந்த குழந்தை உயிர் தப்பியது. 

இந்தக் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இதனைப் பார்த்த வனத்துறையினர் அந்தப் பச்சிளம் குழந்தையை மீட்டு, சிறு காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதனிடையே காரில் பயணித்தவர்கள் 50 கி‌லோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டை அடைந்த பிறகுதான் குழந்தையைக் காணவில்லை எனத் தேடியுள்ளனர். என்ன நடந்தது எனத் தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நிற்க, காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை பெற்றோரிடம் சேர்க்கப்பட்டது. ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் காரிலிருந்து குழந்தை கீழே விழுந்தது தெரியாமல் வீட்டிற்கு வந்துவிட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.