இந்தியா

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு உ.பி. லோக் ஆயுக்தாவில் துணைத்தலைவர் பதவி!

JustinDurai

கடந்த ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்க்கு, உத்தரப்பிரதேச லோக் ஆயுக்தாவில் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப்பட்டது. இந்த இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதிலும் ஏற்பட்ட கலவரத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், முக்கியத்துவம் பெற்ற மசூதி இடிப்பு வழக்கை சிபிஐ விசாரணை செய்தது. இதில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரான கல்யாண்சிங் மற்றும் விஎச்பி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவாகின. 

இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக, அயோத்தியின் உளவுத்துறையினர் அறிக்கையை சிபிஐ சமர்ப்பித்திருந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பின் கடந்த வருடம் செப்டம்பர் 30 இல் வெளியான தீர்ப்பில் அந்த ஆதாரம் ஏற்கப்படவில்லை. சுமார் 2,300 பக்கங்களில் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ் தனது தீர்ப்பை வழங்கி இருந்தார். அதில் அவர், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தார்.

கரசேவகர்களுக்குள் ஊடுருவிய அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் மசூதி இடிக்கப்பட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். குற்றவாளிகள் பட்டியலில் சிக்கிய சிலர் இறந்து விட்ட நிலையில், மிஞ்சியிருந்த 34 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை அளித்த தினத்திலேயே சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவர் சுமார் ஆறு மாதத்திற்கு பின் தற்போது உத்தரப்பிரதேசம் மாநில லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பணிக்கான உத்தரவில் ஏப்ரல் 6 இல் உத்தரப்பிரதேச மாநில ஆளுநரான அனந்திபென் பட்டேல் கையெப்பமிட்டிருந்தார்.