அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். சமூக நல்லிணக்கத்தை காக்க இரு தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 13ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வீட்டில் சமுதாய நல்லிணக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கிருஷ்ண கோபால், ராம்லால், முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் உசேன் மற்றும் இஸ்லாமிய மத குருக்கள், கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டில் எந்த சுழ்நிலையிலும் சமூக, மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் காப்பதுடன் அதை மேலும் பலப்படுத்தும் வகையில் செயல்படுவது என உறுதி எடுத்துக் கொண்டனர். சுயலாபத்துக்காக சதிச் செயலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற இரு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஜமாத் உலாமா இ ஹிந்த் பொதுச் செயலாளர் மஹ்மூத் மதானி, முன்னாள் எம்பி ஷாகித் சித்திக், ஷியா பிரிவு மதகுரு கல்பே ஜாவத் உள்ளிட்ட இஸ்லாமிய மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.