இந்தியா

உத்தராகண்ட்: கடும் பனிச்சரிவால் தெளளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு! பலர் மாயம்

EllusamyKarthik

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் உள்ள ரெய்னி கிராமத்தில் உள்ள மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து தெளளிகங்கா ஆற்றின் நீர்மட்டம் திடீரென கிடுகிடுவென உயர்ந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த பல வீடுகள் சேதமானதோடு, பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளப்பெருக்கை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு சமோலி மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு புறப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடத்திற்கு இந்தோ திபெத் எல்லை பகுதி போலீசாரும் விரைந்துள்ளனர். 

“சமோலி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. களத்தின் நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று அம்மாநில முதல்வர் டி.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார்.