இந்தியா

’இந்தியாவுக்கு என்னால் முடிந்தது; மற்றவர்களும் முன்வாருங்கள்’ - பேட் கம்மின்ஸ் நிதியுதவி!

EllusamyKarthik

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நிவாரண நிதிக்கு பேட் கம்மின்ஸ் நிதி கொடுத்துள்ளார். இந்த நிதியை கொண்டு  இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். 

“இந்தியாவுடனான எனது அன்பு, கடந்த சில ஆண்டுகளாக இணக்கம் அடைந்து வருகிறது. இங்குள்ள மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து சொல்ல மாளாத துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன். 

மக்கள் தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் தொடர் நடத்துவது தேவை தானா? அது பொருத்தமானதா? என்ற விவாதம் எல்லாம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ஐபிஎல் தொடர் மக்களின் வாட்டத்தை ஒரு நாளில் சில மணி நேரமாவது போக்கும் என நம்புகிறேன். 

இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். இந்த நிதியை இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுங்கள். 

என்னுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனபான்மையை கண்டறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். என்னால் முடிந்தது 50000 அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்). இது ஒரு தொடக்கம் தான். 

நமது உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து மக்களின் வாழ்வில் ஒளி சேர்ப்போம். எனது பங்களிப்பு பெரிய திட்டங்களை செயல்படுத்த எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சிலரது வாழ்வில் ஒரு சின்ன மாற்றமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.