சுவிட்சர்லாந்து ஜோடி மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரப்பிரதேச அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் குயன்டின் ஜெரேமி கிளர்க் (24). இவரது காதலி மேரி டிரோஸ் (24). இருவரும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். உலக அதிசயமான தாஜ்மகாலைப் பார்த்த அவர்கள், பிறகு அங்கிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள பதேப்பூர் சிக்ரிக்கு கடந்த ஞாயிறன்று சென்றனர். உள்ளூரைச் சேர்ந்த சிலர் அவர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல் மற்றும் தடியால் சுவிட்சர்லாந்து ஜோடியை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து சிலர் அவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உத்தரப் பிரதேச அரசிடம் இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டில் தாஜ்மகால் அருகே தங்கியிருந்த ஜெர்மன் பெண் ஒருவர், மானேஜரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு, இரண்டு ஜப்பான் சுற்றுலாப்பயணிகள் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.