நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் டெல்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் (SAU) அசைவம் சாப்பிட்டது தொடர்பாக இரு குழுக்களிடம் மோதல் ஏற்பட்டது. இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மற்றும் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என இடதுசாரி, வலதுசாரி என்ற இரண்டு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, வலதுசாரி அமைப்பான ABVP, யாரும் அசைவம் சமைக்கவோ, உண்ணவோ கூடாது எனக் கூறியுள்ளது. இதற்கிடையே, அசைவ உணவை இடதுசாரி அமைப்பினர் சாப்பிட்டதாகக் கூறி வலதுசாரி அமைப்பினர் தாக்கியுள்ளனர். இதில் மாணவிகளையும் வலதுசாரி அமைப்பினர் தாக்கியதாக SFI அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதை எதிர்த்த SFI-யினருடன் ABVPயினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக SFI வெளியிடுள்ள அறிக்கையில், ’மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவு வழங்கக்கூடாது என்ற ABVPயின் ஜனநாயக விரோத கோரிக்கையை நிறைவேற்றாததால் மாணவர்கள் மீது அவ்வமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக உணவகம் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான இடமாகும். மேலும் எந்தவொரு சமூகத்தின் உணவுப் பழக்கவழக்கங்களையும் மற்ற மாணவர் சமூகத்தின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமானது மற்றும் மதச்சார்பற்றது. ABVP குண்டர்கள் மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் காணொளியில் இடம்பெற்றுள்ளது. அசைவ உணவு பரிமாறிய உணவக ஊழியர்களையும் அவர்கள் தாக்கினர். மாணவர்களை தாக்கியவர்கள் மீது தெற்காசிய பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ABVP அமைப்பினரும், சிவராத்திரி அன்று விரதம் இருந்த மாணவ, மாணவிகளுக்கு வலுகட்டாயமாக அசைவ உணவை இடதுசாரி அமைப்பினர் பரிமாறியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோதல் தொடர்பாக SAU நிர்வாகம் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.