இந்தியா

கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி

JustinDurai

வெளிமாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 3 கட்டங்கள் வரும் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 


இதற்கிடையில், மேற்குவங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எஞ்சிய தேர்தல்களை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என்றும் மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹல்சி பகுதியில் மம்தா பானர்ஜி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய மம்தா, ''வெளிமாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவர்கள் மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரசை பரப்புகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து மேற்குங்காளம் வரும் அனைவரும் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.

அடுத்து நடைபெற்ற உள்ள 3 கட்ட தேர்தல்களையும் ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்கள் அதை செய்யாமல் பரப்புரை நேரத்தை குறைத்துள்ளனர். தேர்தல் பரப்புரை நேரத்தை குறைத்த தேர்தல் ஆணையம் தேர்தலை ஏன் ஒன்றாக நடத்தக்கூடாது? தேர்தல் ஆணையம் பாஜகவின் உத்தரவின் பெயரில் செயல்படுகிறது. கொரோனாவால் மிகப்பெரிய அளவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. ஏற்கனவே கொரோனாவால் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.

மேலும், தேர்தல் பரப்புரைக்காக வெளி மாநிலங்களிலிருந்து பரிசோதனை செய்யாமல் பாஜகவினரை அழைத்து வந்ததால், கடந்த 5 மாதங்களாக இல்லாத கொரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளதாகவும் மம்தா குற்றஞ்சாட்டினார்.