மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தொடர் சரிவுகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடாவான சுகேந்து சேகர் ராய், தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சுஷ்மிதா தேவும், தன்னுடைய அசாமின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சிப் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. மேலும், தாம் போட்டியிட்ட தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு உள்ளது.
குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 61 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் எதிர்த்தரப்பு எம்பிக்கள் 20 பேரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாநிலத்திலும் மத்தியிலும் மம்தாவின் செல்வாக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடாவான சுகேந்து சேகர் ராய், தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சுஷ்மிதா தேவும், தன்னுடைய அசாமின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சிப் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். 2021ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த அவர் விரைவாகப் பதவி உயர்வு பெற்று, கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரானார். பின்னர் மாநிலங்களவை இடத்தையும் பெற்றார். தற்போது அந்தப் பதவிகளில் இருந்து விலகிய அவர், அடுத்தகட்டமாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவைப் போய்ச் சந்தித்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் அசாம் மக்களவைத் தொகுதியில் சுஷ்மிதா போட்டியிடக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியிலிருந்து விலகியது குறித்துப் பேசிய சுஷ்மிதா தேவ், "எனக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. நான் எங்கு, எப்படி அரசியல் செய்கிறேன் என்பது எனது தனிப்பட்ட உரிமை. நான் எனது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் பதவியைத் துறக்கிறேன் என்றால், எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் துறக்க வேண்டும். நான் திரிணாமூல் காங்கிரஸை விட்டுவெளியேறிவிட்டேன். நான் ஏன் அக்கட்சியைவிட்டு வெளியேறினேன் என்பது ஒரு நீண்ட கதை. ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் இருக்கும் சூழ்நிலையில் நான் இருக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பலரும் வெளியேறி வருவது மம்தாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.