இந்தியா

குவஹாத்தியில் ஜூலை 12 வரை முழு பொது முடக்கம் !

jagadeesh

அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 5 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,321 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அசாம் மாநிலம் குவஹாத்தியில் முழு பொது முடக்கம் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்த அடுத்த ஏழு நாட்களுக்கு மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இக்காலகட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடைகள் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் " அடுத்த இரண்டு வாரங்களுக்கு அசாம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பே இந்தக் கடுமையான முடிவை எடுக்கக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.