அமினுல் இஸ்லாம் எக்ஸ் தளம்
இந்தியா

பஹல்காம், புல்வாமா தாக்குதல் | மத்திய அரசுக்கு எதிராக கருத்து.. அசாம் எம்.எல்.ஏ. கைது!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அசாமில் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, இந்த தாக்குதல் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அசாமில் எதிர்க்கட்சியாக விளங்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) MLA அமினுல் இஸ்லாம், பிப்ரவரி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை ஆகிய இரண்டும் ’அரசாங்கத்தின் சதித்திட்டங்கள்’ எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அசாம் காவல்துறை அவர் மீது தாமாகவே வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைதும் செய்துள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானைப் பாதுகாக்க முயற்சிக்கும் எவர் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சமூக ஊடகங்களில் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் அறிக்கை மற்றும் வீடியோக்கள், அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, எனவே, அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு AIUDF தலைவர் மௌலானா பதருதீன் அஜ்மல், "இதுகுறித்து நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். இந்த மாதிரியான சூழ்நிலையில், நாங்கள் எப்போதும் அரசாங்கத்துடன் ஒற்றுமையாக நிற்கிறோம். பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை, பயங்கரவாதத்தைப் பரப்புபவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவதூறு செய்கிறார்கள். அமினுல் இஸ்லாத்தின் பேச்சு, எங்கள் கட்சியினுடையது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.