இந்தியாவில் பல மாநிலங்களில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. ஒருசில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் உணவகங்கள், மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கும் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அசாமில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் பாஜக 60 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியை பாஜக தக்கவைத்தது. இதையடுத்து அம்மாநில முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றார். இந்த நிலையில், மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாகப் பேசிய முதல்வர் ஹிமந்தா, “அசாம் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் இன்றுமுதல் மாட்டிறைச்சி உண்பதற்கும் பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் முடிவாக இருந்தது. ஆனால் இப்போது அதை நீங்கள் எந்த பொது இடத்திலும், ஹோட்டலிலும் அல்லது உணவகத்திலும் சாப்பிட முடியாது என்பதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021இன்படி, இந்து, ஜெயின், சீக்கியர்கள் மற்றும் பிற மாட்டிறைச்சி உண்ணாத சமூகங்கள் அதிகமாக வசிக்கும் அல்லது 5 கிமீ சுற்றளவு உள்ள பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் அதன் பொருட்களை விற்பனை செய்வது அல்லது வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாட்டிறைச்சி தடைக்கு மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த மாநில அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா, ”மாட்டிறைச்சி வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்குச் சென்று குடியேறுங்கள். மாட்டிறைச்சி தடையை வரவேற்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுக்குச் சென்று குடியேறுமாறு அசாம் காங்கிரஸுக்கு நான் சவால் விடுகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.