போலீஸ்
போலீஸ் twitter pages
இந்தியா

உடல் பருமனான போலீஸாருக்கு வந்தது சிக்கல்.. அசாமை தொடர்ந்து ஹரியானா அரசு அதிரடி அறிவிப்பு!

Prakash J

அசாம் மாநில காவல் துறையில் அதிரடி சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடிவு செய்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கடந்த வாரம், போலீஸார் தங்களது உடலை முழுத் தகுதியுடன் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அடுத்து வரும் 3 மாத காலங்களுக்குள், உடல் எடையைக் குறைக்க முடியாத காவல் துறையினருக்கு விஆர்எஸ் திட்டம் கொண்டு வரப்படும். இதில் மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு அசாம் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தபோதும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அம்மாநில டிஜிபி ஜிபி சிங் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “அசாமில் உள்ள போலீஸாருக்கு இன்றில் இருந்து 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள்ளாக உடல் எடை அதிகம் கொண்ட போலீஸார் தங்கள் எடையை குறைத்துக்கொள்ள வேண்டும். 3 மாதங்களுக்கு பிறகு அனைவருக்கும் பிஎம்ஐ (உயரத்துக்கேற்ற எடை) சோதனை செய்யப்படும். இதில் பிஎம்ஐ 30+ இருப்பவர்களுக்கு அடுத்த 3 மாதம் (நவம்பர் வரை) டைம் கொடுக்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் மேற்குறிப்பிட்ட பிஎம்ஐக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

அசாம் அரசின் இந்த முடிவை, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) வரவேற்றிருந்தது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அமினுல் இஸ்லாம், ”இது, அசாம் காவல் துறையின் நல்ல முயற்சி. காவல் துறையில் உள்ள சிலர் உடல் பருமனாலும் நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களுடைய வேலையில் வெற்றிபெற முடியும். இந்த நடவடிக்கைக்காக அசாம் காவல் துறையை நான் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அசாமைத் தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள பருமன் மிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட காவலர்கள் மீண்டும் உடல் தகுதி பெறும் வரை தண்டனையாக கருதப்படும் காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் என ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், "பல காவல்துறை அதிகாரிகள் அதிக எடையுடன் இருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்களின் உடற்தகுதியைப் பேணுவதற்காக, அதிக உடல் எடை கொண்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும்/ பணியாளர்களும் காவல் பணிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் பணிக்குத் தகுதி பெறாதவரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

”குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது” எனக் குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அனில் விஜ், “இதைக் கருத்தில் கொண்டே இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மாநிலத்தைக் குற்றமல்லாததாக மாற்ற முடியும்” எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.