இந்தியா

’சச்சின் பைலட் என்னுடன் பேசி 18 மாதங்கள் ஆச்சு’: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

JustinDurai

கடந்த ஒன்றரை ஆண்டுக்காலமாக சச்சின் பைலட் தன்னிடம் பேசியதில்லை என்றும்  முதல் நாளிலிருந்து தனது அரசாங்கத்தை கவிழ்க்க பைலட் சதி செய்தார் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அம்மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.

இச்சூழலில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அசோக் கெலாட், ‘’கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எங்களிடையே எந்த உரையாடலும் இல்லை. ஒரு முதலமைச்சருடன் பேசாத, அவரது ஆலோசனையை எடுக்காத, அவருடன் எந்த உரையாடலையும் வைத்திருக்காத ஒரு அமைச்சரை பெற்றிருக்கிறோம். எதிர்ப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஜனநாயகத்தில் உரையாடல் என்பது அவசியம் ” என்றும் குறிப்பிட்டார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பான வழக்கில் சச்சின் பைலட் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், அவரே முன்வந்து விளக்கம் அளித்தது சான்றாக அமைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.