இந்தியா

விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

webteam

பணம், தங்க நகைகளை கொள்ளையடிப்பதைதான் கேள்விபட்டிருப்போம். ஆனால், விலை உயர்வு காரணமாக, சுமார் 100 மூட்டை வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம்.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந் ததால் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது‌. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரையிலும், சென்னையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சென்னையில் கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விலையை கட்டுப்படுத்த ஏற்கனவே இருப்பு வைத்திருந்த 56 ‌ஆயிரம் டன் வெங்காயத்தை நாள்தோறும் மத்திய அரசு சந்தைக்கு விநியோகம் செய்து வருகிறது. இதுதவிர, பல்வேறு நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், விலை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களை அவதியடையச் செய்துள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பதுவாவில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 வெங்காய மூட்டை கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இங்கு வியாபாரி, தீரஜ் குமார் என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இதில் வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, குடோன் பாதுகாவலர் வெளியே சென்று விட்டு வந்து பார்த்தபோது, குடோனின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த வெங்காய மூட்டைகளில் சுமார் 100 மூட்டைகளை காணவில்லை. இதன் மதிப்பு, ரூ.8 லட்சம். மேலும் கல்லாவில் இருந்த 1.83 லட்சம் ரூபாயையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

இதுபற்றி தீரஜ்குமார் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.