apaar
apaar pt web
இந்தியா

ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண்; “அனைத்தையும் டிஜிட்டலில் வைத்துவிட்டால்..” - கல்வியாளர் பிரின்ஸ்

Angeshwar G

APAAR

தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தனித்துவமான "ஆதார்" அடையாள எண் உள்ளது போன்று அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண்ணை அறிமுகப்படுத்தவுள்ளது மத்திய அரசு. "தானியங்கி இயந்திர கல்வி கணக்குப்பதிவு" என்பதை குறிக்கும் "APAAR" (AUTOMATED PERMANENT ACADEMIC ACCOUNT REGISTRY) என்று அழைக்கப்படும் இந்த அடையாள அட்டையை தேசிய கல்வி கொள்கை 2023- ன் கீழ் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற மாணவர் அடையாள எண் இப்போதே விமர்சன குரல்களை எழுப்பியுள்ளது.

மாணவர்களின் கல்வியை கண்காணிக்கலாம்

இந்த அடையாள எண் அனைத்து மாணவர்களுக்கும், ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை இருக்கும் வகையில் மாணவர்களின் வாழ்நாள் கல்வி பயணத்தை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மாணவர்களுக்கான தனித்துவ அடையாள அட்டை உருவாக்குவதில் முக்கியத்துவம் பற்றி விவாதிக்க கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் அக்டோபர் 18க்குள் ஆலோசனை கூட்டங்கள் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மாணவர்கள் அடையாள அட்டையிலும் இடம்பெறும் என்பதால் மாணவர்களுடைய தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்குமாறும் கல்வி நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

நியாயமற்ற அணுகுமுறை

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், “ஆதார் நடைமுறையில் கூட மக்களது தனியுரிமையில் சமரசம் செய்து கொள்ளுதல் கூடாது என்று தான் உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் எல்லைக்கும் செல்லும் போது தனியுரிமைகள் பாதுகாக்கப்படுமா என்ற மிக முக்கியமான கேள்வியெல்லாம் எழுந்துள்ளது. அதேபோல் ஆதார் விவரங்கள் வணிக ரீதியாக வெளியில் வருவதாக எல்லாம் செய்திகள் வெளிவரும் சூழலில் குழந்தையின் தனிப்பட்ட விபரங்களை டிஜிட்டல் எல்லைக்குள் பொதுவெளியில் வைப்பதென்பது நிச்சயமாக நியாயமற்ற அணுகுமுறை.

இந்த தகவல்கள் ஒரு குழந்தை ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு சென்றுள்ளதா இல்லையெனில் பள்ளிப்படிப்பையே நிறுத்திவிட்டதா என தெரிந்துகொள்வதற்காக? எப்போது ஒரு குழந்தை கற்றலில் இருந்து விடுபடும், குழந்தை கற்றலுக்கான வாய்ப்பு தரப்படவில்லை என்றால். சமமான வாய்ப்பு கொடுத்துவிட்டால் எதற்கு விடுபடுதல் வரப்போகிறது.

மாணவர்களது நலன் சார்ந்து அல்ல

அப்படியே விடுபடுதல் இருந்தாலும், அப்பள்ளி நிர்வாகம், உள்ளாட்சித் துறை, மாநில அரசின் கீழுள்ள பிற துறைகள், பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட வட்டார நிர்வாகிகள் போன்றோரின் கடமை தான் என்ன? சமூக நலத்துறையின் கடமை என்ன? அப்படியானால் அரசு நிர்வாகம் எதையும் செய்யாது. அனைத்தையும் டிஜிட்டலில் வைக்கப்போகிறேன் என்றால் மேற்கண்ட துறைகள் செயலற்றுப் போய்விடுமா என்ற கேள்விதான் எழுகிறது. இது நிச்சயமாக மாணவர்களது நலன் சார்ந்து அல்ல” என தெரிவித்துள்ளார்.