அனில் அம்பானி எக்ஸ் தளம்
இந்தியா

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ் | அனில் அம்பானி பெயர்.. கசிந்த சீக்ரெட் உரையாடல்.. பேசியது என்ன?

அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அது, இந்தியாவிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Prakash J

அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், தற்போது இதில் தொழிலதிபர் அனில் அம்பானி பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.ஒருகாலத்தில் செல்வாக்குமிக்க இந்திய தொழிலதிபரான அனில் அம்பானியுடன் எப்ஸ்டீன் பரிமாறிக்கொண்ட செய்திகள் 2017 - 2019 வரை நீடிக்கின்றன என்று அந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அது, இந்தியாவிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்

ஆனால், அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்று அழைக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது, உலகளவில் புயலைக் கிளப்பி வருகிறது.

அந்த வகையில், தற்போது இதில் தொழிலதிபர் அனில் அம்பானி பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.ஒருகாலத்தில் செல்வாக்குமிக்க இந்திய தொழிலதிபரான அனில் அம்பானியுடன் எப்ஸ்டீன் பரிமாறிக்கொண்ட செய்திகள் 2017 - 2019 வரை நீடிக்கின்றன என்று அந்த ஆவணங்கள் காட்டுகின்றன. சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எப்ஸ்டீன் மீது குற்றம்சாட்டுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, இந்த உரையாடல்கள் நடைபெற்றதாகவும், அப்போது எப்ஸ்டீன் மற்றும் அனில் அம்பானி ஆகிய இருவரும் உலக விவகாரங்கள், வணிகம் மற்றும் பெண்கள் பற்றிப் பேசியதாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் இருவரும் இதுதொடர்பாக நேரில் சந்திக்கத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

anil ambani

அப்போது, "நீங்கள் யாரைப் பரிந்துரைக்கிறீர்கள்" என்று அனில் அம்பானி வினவியதாகவும், அதற்கு எப்ஸ்டீன், "ஓர் உயரமான ஸ்வீடிஷ் பொன்னிற அழகி" எனப் பதிலளித்ததாகவும், "அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று அனில் அம்பானி 20 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் மீண்டும் பதிலளித்ததாகவும் அதில் கூறப்படுகிறது. மேலும், அனிலுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொலைபேசி குறுஞ்செய்திகள், பாரிஸில் சந்திப்பது பற்றி அவர்கள் விவாதித்ததையும் ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கத் தவறியதையும் குறிப்பிடுகின்றன. மே 2019இல் நியூயார்க்கில் இருக்கத் திட்டமிட்டிருப்பதாக அனில் அம்பானி கூறியபோது, ​​எப்ஸ்டீன் அவரைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அப்போது, "நீங்கள் ரகசியமாகச் சந்திக்க விரும்பும் யாராவது இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று எப்ஸ்டீன் கோரிக்கை வைத்ததாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.