இந்தியா

’ஜாக்குவார் கேட்டா, பிஎம்டபிள்யூ தருவீங்களா?’ கோபத்தில் பணக்கார மகன் செய்த காரியம்!

webteam

ஜாக்குவார் காருக்குப் பதிலாக பிஎம்டபிள்யூ காரை பரிசாகக் கொடுத்ததால் கோபத்தில் ஆற்றுக்குள் காரை மூழ்கடிக்க முயன்ற மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர், அந்த நிலக்கிழார். பெரும் பணக்காரரான அவரது மகன், தனக்குப் பரிசாக விலை உயர்ந்த ஜாக்குவார் கார் வேண்டும் என்று கேட்டார், அப்பாவிடம். தருவதாகச் சொன்ன நிலக்கிழார், அந்த காரின் விலையை கேட்டார். அது மிகவும் அதிகமாக இருந்ததால், அதை விட விலை குறைந்த, பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வாங்கிக் கொடுத்தார்.

’அதைக் கேட்டா, இதைத் தருவீங்களா?’ என்று கடுப்பான மகன், கோபத்தில் அப்பாவைத் திட்டினார். சமாதானப்படுத்தினார், பாசக்கார அப்பா. கேட்காத செல்ல மகன், அந்த காரை ஆற்றுக்குள் மூழ்கடிக்க முடிவு செய்தார். அதன்படி ஆற்றில் காரை விட்டு விட்டு வந்துவிட்டார். கரைபுரண்டு ஓடும் ஆற்றுக்குள் மிதந்து சென்ற கார், இடையில் புற்கள் நிரம்பியிருந்த இடத்தில் சிக்கிக் கொண்டது. இதை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அவர். பின்னர் உள்ளூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உதவியுடன் அதை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

(ஜாக்குவார்)

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆற்றில் மூழ்க வைக்க முயன்ற பிஎம்டபிள்யூ காரின் மதிப்பு ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.