ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சென்னம்பள்ளி கோட்டையில் வைர படிவங்கள் இருப்பதை கனிம வளத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளியில் உள்ள கோட்டையில் புதையல் இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. 16 வது நூற்றாண்டில் அரவீடு திம்மராஜா என்பவர் 100 ஏக்கர் பரப்பளவில் மலையை குடைந்து இந்த சென்னம்பள்ளி கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. அவரது காலத்திற்கு பிறகு குத்தி ராஜா, விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்ததாகவும் போர்ச்சுகீசியர்கள் போர் தொடுக்க வந்தபோது மன்னர்கள் இந்த கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரியங்கள் அடங்கிய புதையல் பதுக்கி வைக்கப்பட்டுருப்பதாக கூறப்படுகிறது.
இந்த புதையலை எடுக்க பலர் முயற்சி செய்து வந்தனர் ஆனால் முடியவில்லை. இந்நிலையில் தொல்லியியல் துறை அதிகாரிகள் கோட்டையில் புதையல் இருப்பதாக கண்டறிந்து ஆந்திர மாநில அரசுக்கும் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி புதையலை எடுக்க தொல்லியியல் துறை அதிகாரிகள் புதையலை எடுக்க கோட்டையை சுற்றி இதுவரை 3 இடங்களில் சுரங்கம் தோண்டி தேடி வந்தனர். இதில் யானைகளின் தந்தம், குதிரைகளின் எலும்புகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவை எந்த காலத்தை சேர்ந்தவைகள் என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.மன்னர் ஆட்சியில் குதிரை மற்றும் யானைகள் மூலம் புதையலை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் புதையல் கிடைத்தாக இல்லை. சுரங்கம் தோண்டப்பட்ட கோட்டைக்கு பின்புறம் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு செல்லும் பாதையில் 11 படிகளும், 3 தலைகள் கொண்ட நாகம், 11 தேவதைகளின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருப்பதை அறிந்து கிணற்றுக்கு கீழ் பகுதியில் சுரங்கம் இருக்கலாம் என முடிவு செய்தனர். எனவே அதற்காக கடந்த இரண்டு நாட்களாக கிணற்றில் கேமிராக்களை அனுப்பி சோதனையிட்டனர். இதில் கிணற்றின் கீழ் பகுதியில் சுரங்கம் இருப்பதற்காண ஆதாரங்கள் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றது.
கிணற்றில் நீர் ஊற்று இருந்ததால் ரசாயனம் கொண்டு ஊற்று நீர் நிறுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கனிமவளத் துறையினர் மலை பகுதியில் அதிநவீன ஸ்கேனர் கருவிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், கோட்டை உள்ள மலையின் மேல் பகுதியில் இருந்து 12 மீட்டர் வரை வைர படிவங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கனிமவளத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது வைர படிவங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.