இந்தியா

பிரதமரை விமர்சித்த ஜார்க்கண்ட் முதல்வர் - ஜெகன் மோகன் ரெட்டி அறிவுரை

EllusamyKarthik

ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடுமையாக சாடியுள்ளார். ‘மனதின் குரல் வேண்டாம். செயலின் குரல்தான் வேண்டும்’ என கொரோனா விவகாரத்தை மேற்கோள் காட்டி பிரதமர் மோடியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தான் தேசம் இருக்கும் தற்போதைய சூழலில் இந்த மாதிரியான தரம் தாழ்ந்த அரசியல் தேசத்தை பலவீனப்படுத்தும் என சொல்லியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

“அன்புள்ள ஹேமந்த் சோரனுக்கு... உங்கள் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. ஒரு சகோதரர் என்ற முறையில் உங்களிடம் நான் இதை கேட்டுக்கொள்கிறேன். கொள்கை அடிப்படையில் நாம் வேறுபட்டு இருந்தாலும் இதுபோன்ற இந்த மாதிரியான தரம் தாழ்ந்த அரசியல் தேசத்தை பலவீனப்படுத்தும்” என ஹேமந்த் சோரனை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா நிலவரம் தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.