ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று உண்ணாவிரத்தைத் தொடங்கினார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் அடுத்தகட்டமாக, டெல்லியில் அவர் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
அங்குள்ள ஆந்திர பவனில் இன்று இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் தெலுங்குதேச எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.