இந்தியா

ஆந்திரா: ரசாயன ஆலையில் அமோனியா வாயு கசிவு – 100-க்கு மேற்பட்ட பெண்கள் மயக்கம்

kaleelrahman

ஆந்திராவில் ரசாயன ஆலையில் அமோனியம் வாயு கசிந்ததால் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊரியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே அனகாபள்ளி பகுதியில் திடீரென 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்தனர். விதை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் 130 பெண்களும் வாந்தி எடுத்ததோடு மயக்கமடைந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் மயக்கமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சுயநினைவை இழந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் இடம் இல்லாத நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அனகாபள்ளி மாவட்ட ஆட்சியர் ரவி சுபாஷ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பேசும்போது... விதை தயாரிக்கும் நிறுவனத்தின் அருகில் உள்ள ரசாயன ஆலையில் அமோனியம் வாயு கசிந்ததுள்ளதாகவும், டிஜிட்டல் மீட்டரால் வாயு கசிவை கண்டறிந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த பெண் ஊழியர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.