இந்தியா

ஆந்திரா: கொரோனாவால் குடும்பத்தினர் கண்ணெதிரே துடிதுடித்து மரணமடைந்த கூலித் தொழிலாளி

ஆந்திரா: கொரோனாவால் குடும்பத்தினர் கண்ணெதிரே துடிதுடித்து மரணமடைந்த கூலித் தொழிலாளி

kaleelrahman

ஆந்திராவில் கூலித் தொழிலாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும்படி தெரிவித்த கிராம மக்கள். பிள்ளைகள் மனைவியின் கண் எதிரே துடிதுடித்து உயிரிழந்தார் அந்த கூலித் தொழிலாளி.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜி.சிகதம் மண்டலம் ஜெகனாதவலச பஞ்சாயத்து கோயனபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரி நாயுடு (44). விஜயவாடாவில் கூலி தொழிலாளியாக பணி புரிந்து வந்த இவருக்கு, சளி, காய்ச்சல் இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரி நாயுடு குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்குச் சென்றார். ஆனால் கிராமத்தினர் ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு குடிசையில் தங்குமாறு தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஆசிரி நாயுடு உடல்நிலை கவலைக்கிடமாகியது. ஆனால் கிராமத்தினர், மருத்துவமனையிலும் போதிய ஆக்சிஜன் இல்லை. அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனக் கூறிய நிலையில் ஆசிரி நாயுடு அந்த குடிசையின் வெளியிலேயே மூச்சு விட முடியாமல் திணறி துடித்துக் கொண்டிருந்தார்.

தனது தந்தை மூச்சு விட முடியாமல் துடித்துக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத மகள் தனது தந்தையிடம் செல்ல முயன்ற நிலையில், ’கொரோனாவால் அவர் உயிர் துடித்துக் கொண்டிருப்பதால் உனக்கு ஏதாவது ஆகிவிடும்’ என அவரது தாய் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தந்தையின் துடிப்பை பார்க்க முடியாத மகள் இறுதியாக தண்ணீரை தந்தையின் வாயில் ஊற்றி நிலையில் சில நிமிடங்களிலேயே குடும்பத்தினர் கண்ணெதிரிலேயே ஆசிரி நாயுடு துடிதுடித்து உயிரிழந்தார்.