இந்தியா

மதுக்கடையில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்த ஆசிரியர்களை அமர்த்திய ஆந்திர அரசு 

webteam
மதுபானக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சரிசெய்ய ஆந்திர அரசு ஆசிரியர்களை அமர்த்தியது தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
 
விசாகப்பட்டினத்தில் உள்ள மதுபானக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களாக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. அதனையடுத்து மதுபானக் கடைகளை மீண்டும் திறந்த இரண்டாவது நாளில், மதுப் பிரியர்கள் வந்து குவிந்தனர். அப்போது அவர்கள் யாரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 
 
காவல்துறையினரும் தன்னார்வலர்களும் சேர்ந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், ஆசிரியர்கள் மாநில அரசால் அமர்த்தப்பட்டனர். மதுபானம் வாங்க வரிசையில் நின்றவர்களுக்கு ஆசிரியர்கள் டோக்கன்கள் விநியோகிக்கும் வேலையை மேற்கொண்டனர் என்றும் மேலும் கூட்டத்தைச் சீர்செய்ய உதவினர் என்றும்  அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
இது குறித்து சில இடங்களில் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள், தங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று விவரங்களைக் கேட்டறிய மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து (டி.இ.ஓ) வாய்வழி உத்தரவுகளைப் பெற்றதாகவும், அங்கிருந்து கூட்டத்தை நிர்வகிக்க அவர்களுக்கு ஒரு மதுக் கடை ஒதுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் இவர்களில் சிலர் செய்தியாளர்களிடம் பேசும்போது மதுக் கடைகளில் கூட்டத்தை நிர்வகிக்க பணிக்கப்பட்டபோது 'குற்ற உணர்ச்சி' ஏற்பட்டதாகவும் ஏனெனில் இந்தத் தொழிலை மேற்கொள்வதற்காக தாங்கள் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். 
 
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையைத் தெலுங்கு தேசம் கட்சியும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் விமர்சித்துள்ளன.