இந்தியா

ஆந்திரா: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை-மகன் உட்பட 3பேர் உடல் கருகி பலி!

webteam

ஆந்திராவில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். உரிமையாளரின் மகன் பிறந்த நாளன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

ஆந்திராவில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் உரிமையாளர், அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். சித்தூரில் இயங்கி வந்த அந்தத் தொழிற்சாலையில் அதிகாலையில் பற்றிய நெருப்பு, காகிதம் உள்ளிட்ட பொருள்களில் பற்றிப்பரவி கொளுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், தொழிற்சாலையின் உரிமையாளர் பாஸ்கர், அவரது மகன் டில்லிபாபு மற்றும் நண்பர் பாலாஜி என 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் உரிமையாளரின் மகன் டில்லிபாபுவுக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட இருந்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனையுடன் கூறினர்.