இந்தியா

106 கி.மீ. சைக்கிளில் மகனை அழைத்துச் சென்ற தந்தை.. உதவிக்கரம் நீட்டிய ஆனந்த் மஹிந்திரா

webteam

சில தினங்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேச மாநிலம், சொந்த கிராமத்தில் இருந்து பத்தாம் வகுப்பு துணைத் தேர்வை எழுதுவதற்கு தன் மகனை சைக்கிளில் 106 கி.மீ. அழைத்துச் சென்ற ஒரு தந்தையின் பேரன்பு மெய் சிலிர்க்க வைத்தது. அந்த தந்தையின் செயலை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, வீரமான பெற்றோர் என்று புகழ்ந்துள்ளார். மேலும், சிறுவனின் எதிர்காலக் கல்விக்கு உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவரது மகனின் தேர்வு மையம், சொந்த ஊரில் இருந்து 106 கி. மீ. தொலைவில் இருந்தது. ஊரடங்கால் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஏழைத் தந்தையிடம் இருந்தது சைக்கிள் மட்டுமே. மகனின் கல்விக்கனவு தடைபடக்கூடாது என நினைத்தவர் மகன் அசீஸை அழைத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டார். ஒரு நண்பரிடம் 500 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு குடும்பத்தினரின் பிரார்த்தனையுடன் பயணத்தை தொடங்கினர்.

இந்த ஏழைத் தந்தையின் செயலுக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. மாநில அரசு அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்று உதவிகள் செய்யப்பட்டன. இப்போது ஆனந்த் மஹிந்திராவின் இதயத்தையும் அது தொட்டுவிட்டது. "ஒரு வீரதீரமான பெற்றோர். தன் குழந்தைகளுக்காக பெரிய கனவுகளைக் காண்பவர். இதுதான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு எரிபொருளாக இருக்கும். எங்களுடைய அறக்கட்டளை அசீஸின் அடுத்தக்கட்ட கல்விக்கு உதவும்" என்றும் அவர் எழுதியுள்ளார்.