இந்தியா

ஊரடங்கால் வீட்டுக்குள் மனிதர்கள்: சாலையில் ஒய்யார நடைபோட்ட யானை!

webteam

கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு நிலையில் இருந்து தள்ளி இருக்கின்றன. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் இல்லை. பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மனிதர்கள் கூட்டம் நிரம்பி வழியும் பல இடங்கள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன. காற்று மாசு குறைந்துள்ளது. நீரின் தரம் உயர்ந்துள்ளது.

மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால், பல இடங்களில் விலங்குகள் சாலைகளில் வலம் வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம் மூணாரில் யாருமில்லாத சாலையில் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நீண்ட தந்தங்கள் கொண்ட அந்த யானை மெதுவாக அசைந்து அசைந்து சாலையில் சென்றதை அங்குள்ள ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவே தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த மாதம், அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ள விலங்கான புனுகு பூனை ஒன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுதந்திரமாக வலம்வந்தது குறிப்பிடத்தக்கது.