இந்தியா

பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து - அலிகார் பல்கலைக்கழக மாணவர் சஸ்பெண்ட்

rajakannan

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மாணவரை, அலிகார் பல்கலைக் கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தாக்குதலுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. பசிம் ஹிலால் என்ற அந்த மாணவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்சி கணிதவியல் படித்து வந்த அந்த மாணவரை உடனடியாக பல்கலைக் கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அந்த மாணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்கலைக் கழக செய்தி தொடர்பாளர் சலீம், “சர்ச்சைக்குரிய அந்த ட்விட்டர் கருத்து குறித்து எங்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக அந்த மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபோன்ற இழிவான செயலை பல்கலைக் கழகம் அனுமதிக்காது. எங்களை பொறுத்தவரை நாடுதான் முதன்மையானது. புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம். இதுபோன்ற எதனையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறினார். 

முன்னதாக, பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.   

அதேபோல், என்.டி.டி.வி நிறுவனத்தில் பணிபுரியும் நிதி சேதி என்ற செய்தியாளரும் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தன்னுடைய ஃபேஸ்புக்கில் தெரிவித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த சேதியின் ஃபேஸ்புக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.