இந்தியா

காங்கிரஸ் முதல்வர்களை சந்திக்கும் ராகுல் - காரணம் என்ன? 

காங்கிரஸ் முதல்வர்களை சந்திக்கும் ராகுல் - காரணம் என்ன? 

rajakannan

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களை இன்று சந்திக்க அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் ராஜினாமா செய்து வந்தனர். ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறினார். ஆனால், ராகுல் காந்தியை தலைவராக தொடர வேண்டும் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுலே தலைவராக தொடர வேண்டும் எனக் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனையடுத்து, ராஜினாமா செய்யும் தலைவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இதுவரை ராஜிமானா செய்துள்ளனர். 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களை ராகுல் காந்தி இன்று சந்திக்கவுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பாகெல் மற்றும் பாண்டிசேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ராகுல் காந்தியை இன்று மதியம் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பிற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இருப்பினும், காங்கிரஸ் தலைவர்களின் தொடர் ராஜினாமா குறித்தும் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.